குடும்ப நினைவுச்சின்னத்திற்கு செலவிட்ட பணத்தை மீளச் செலுத்துமாறு மகிந்தவிற்கு பணிப்பு?
Written By Admin: Arankamnews on | 9/12/2015 06:51:00 PM
அரசாங்க பணத்தை பயன்படுத்தி மெதமுல்லையில் டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளையினால் நிர்மாணித்த குடும்ப நினைவுச்சின்னத்திற்காக செலவிட்ட பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு செலுத்துமாறு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இவ் நினைவுச்சின்னம் மற்றும் அருங்காட்சியகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.அதற்காக காணி மீட்டல் கூட்டுத்தாபனத்தின் எட்டரை கோடி பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பணத்தை தனியார் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தவறு என்பதனால் அப்பணத்தை மீண்டும் செலுத்துமாறு இதனூடாக டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்பணத்தை செலுத்துவதாக தேர்தலுக்கு முன்னர் டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளையினர் குறிப்பிட்டிருந்தனர் எனினும் இதுவரையில் அப்பணம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மேலும் குறித்த கல்லறை நினைவுச்சின்னம் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
